தினமலர் 18.10.2010
ஆயுத பூஜை கழிவுகள் 1,000 டன் சேலம் மாநகராட்சியில் அகற்றம்
சேலம்: சேலம் மாநகராட்சியில் ஆயுத பூஜை காரணமாக, நேற்று ஒரே நாளில் 1,000 டன் கழிவுகள் அகற்றப்பட்டது.ஆயுத பூஜையின் போது, வீடு, அலுவலகம், தொழில் புரியும் இடம், வாகனம் ஆகியவற்றுக்கு பூஜை செய்யப்படும். பூஜையை முன்னிட்டு தேங்காய் மற்றும் பூசணிக்காய்கள் உடைக்கப்படும். மறு நாள் பூஜைக்கு பயன்படுத்திய வாழைக்கன்றுகள், மாலைகள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் அப்புறப்படுத்தப்படும்.சேலம் மாநகர பகுதியில் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கத்தில், ரோட்டில் பூசணிக்காய்களை உடைக்க வேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும் அனைத்து இடங்களில் ரோட்டிலேயே பூசணி மற்றும் தேங்காய் உடைக்கப்பட்டது.
ஆயுத பூஜை கழிவுகள் தேக்கம் அடையாமல் இருக்க, சேலம் மாநகராட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சியின் 60 வார்டிலும் ஒரே நேரத்தில் ஆயிரத்து 600 துப்புரவு பணியாளர்கள் பூஜை கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மாநகராட்சிக்கு சொந்தமான டிராக்டர், குப்பை லாரி, மினி ஆட்டோ உள்ளிட்ட 26 வாகனங்களில் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் 1,100 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது. வழக்கமாக சேலம் மாநகராட்சியில் 600 டன் குப்பைகள் சேகரிக்கப்படும்.