தினகரன் 21.10.2010
கோவில்பட்டியில் காலாவதி பொருட்கள் பறிமுதல்
கோவில்பட்டி, அக். 21: கோவில்பட்டியில் பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால் கடைகளில் காலாவதியான உணவு பொருட்களை நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் விஜயராகவன் அறிவுறுத்தலின்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், சீனிராஜ், ஸ்டான்லிகுமார், முத்துகுமார், வெங்கடேசன் மற்றும் சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் ஆகியோர் கோவில்பட்டி மெயின்ரோடு, ரயில் நிலையம் எதிரே உள்ள பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தரமானதாக உள்ளனவா என சோதனை செய்தனர். மொத்தம் 50 கிலோ எடையுள்ள காலாவதியான டீத்தூள் பாக்கெட்டுகள், ஸ்வீட்டுகள் மற்றும் உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பேக்கரியில் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.