Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை திட்ட நன்மைகள் : நூதனமான விழிப்புணர்வு பிரச்சாரம்

Print PDF

தினமலர் 22.10.2010

பாதாள சாக்கடை திட்ட நன்மைகள் : நூதனமான விழிப்புணர்வு பிரச்சாரம்

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து "ஆரோக்கியம்' அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் மத்தியில் நூதன முறையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

தர்மபுரி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கி நடக்கிறது. இந்த பணியால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், பாதாள சாக்கடை திட்டபணிக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் பாதாளசாக்கடை திட்டம் குறித்த விழிப்புண்வு செய்யும் வகையில் தர்மபுரி ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் பாதாள சாக்கடை திட்டத்தினால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து துண்டுபிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த துண்டு பிரசுரத்தில் கூறியுள்ளதாவது: பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமைத்து பராமரிக்கும் பட்சத்தில், பொதுமக்களின் ஆரோக்கத்துக்கு நிரந்தர பயனளிக்கும். கழிவு நீர், சாக்கடை நீர் திறந்த வெளியில் தேக்கம் தவிர்க்கப்படும். துர்நாற்றம் வீசுவது தவிர்க்கப்படும். வீட்டிற்குள் அமைக்கும் செப்டிக் டேங்க் அவசியமில்லை. கொசுவினால் பரவும் யானைக்கால் நோய் முற்றிலும் தடுக்கப்படும். நோய் பரப்பும் சில பூச்சுகள், கிருமிகள் உற்பத்தியை தடுத்து நோய் பரவுதை தடுக்கலாம். கழிவு நீர் தேக்கத்தால் கிணற்று நீர், ஆழ்த்துளை கிணற்று நீர் மாசுப்படுவது தவிர்க்கப்படுகிறது. பன்றி போன்ற விலங்கினங்களின் தொல்லை குறையும்.

மழைக்காலத்தில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் வழிந்து ஓடாது. பாதாள சாக்கடையில் வெளியேற்றப்படும் கழிவுநீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தர நிர்ணயப்படி சுத்தம் செய்வதால், அந்நீரை விவசாயத்திற்கு மீண்டும் பயன்படுத்தலாம். இயற்கையாக மழை குறைவாகம் பெய்யும் தர்மபுரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு சுத்திரிக்கப்பட்ட சாக்கடை நீர் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அதனால், சுற்றுப்புழ சுகாதார மேம்பாட்டிற்கு நிரந்தர பயன் அளிக்கும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாதாள சாக்கடைக்கு தோண்டப்படும் குழி வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கும், போலீஸாருக்கு உரிதுணை புரிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.