தினமலர் 01.11.2010
காய்ச்சிய நீரை குடிக்கமா நகராட்சி வேண்டுகோள்
சென்னை : மழைக்காலத்தில் மக்கள் வாந்தி, பேதியால் பாதிக்கப்படுவதை தடுக்க, சென்னை மாநகராட்சி வீடு வீடாக மூன்று லட்சம் குளோரின் மாத்திரைகளை வினியோகிக்க திட்டமிட்டுள்ளது.நகரில் தொடர்ந்து மழை பெய்வதால் குடிநீரில் கழிவு நீர் கலக்க வாய்ப்பிருப்பதாலும், சில இடங்களில் குடிநீரில் குளோரின் அளவு குறைந்திருப்பதாலும் மக்கள் வாந்தி, பேதியால் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால், சென்னை மாநகராட்சி வீடு வீடாக குளோரின் மாத்திரைகளை வழங்கி வருகிறது.வடசென்னை பகுதியில் தண்டையார்பேட்டை, பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு ஆகிய மண்டலங்களில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளிலும், குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மற்ற மண்டலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளில் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.கடந்த நான்கு ஐந்து நாட்களாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை குளோரின் மாத்திரைகளை வழங்கி வருகிறது. வரும் வாரத்திற்குள் மூன்று லட்சம் மாத்திரைகளை வினியோகிக்க திட்டமிட்டிருப்பதாக, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.அதோடு, பொதுமக்கள் காய்ச்சி, வடிகட்டிய குடிநீரை குடிக்குமாறு, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.