தினகரன் 08.11.2010
மாநகராட்சி எடுத்த நடவடிக்கையால் பட்டாசு குப்பை குறைந்தது
புதுடெல்லி, நவ.8: மாநகராட்சி எடுத்த நடவடிக்கையால் இம்முறையில் டெல்லியில் பட்டாசு குப்பை 10 சதவீதத்துக்கு மேல் குறைந்தது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகராட்சியின் செய்தி தொடர்பாளர் தீப் மாத்தூர் கூறியதாவது:
சாதாரணமாக தீபாவளி பண்டிகையின் போது டெல்லியில் 6000 &65000 மெட்ரிக் டன் குப்பைகள் குவியும். ஆனால், இம்முறை 5,500 மெட்ரிக் டன் குப்பைதான் குவிந்துள்ளது. இதற்கு மாநகராட்சி கடந்த 2 மாதமாக எடுத்த தூய்மையான டெல்லி நடவடிக்கையே காரணம். குறிப்பாக கடந்த 15 நாட்களுக்கு முன், தீபாவளி நாளில் டெல்லியை தூய்மையாக வைத்திருக்கும் பிரசாரத்தை மாநகராட்சி தொடங்கியது. அன்றாடும் குவியும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டன. இதற்காக துப்புரவு தொழிலாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றினர்.
தீபாவளி நாளிலும் அதற்கு அடுத்த நாளிலும் பட்டாசு குப்பைகள், உயர்ரக அன்பளிப்பு அட்டைகள், இனிப்பு பெட்டிகள் ஆகியவை மலைப் போல் குவிந்திருக்கும். இதில் மார்க்கெட் பகுதிகளில்தான் குப்பைகள் மலை போல் குவிந்திருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் குப்பையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், பலனளித்தது இல்லை. ஆனால், இம்முறை இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. குப்பைகளை குவிய வைக்கும் பொருட்கள் மீது பணத்தை செலவழிப்பதை மக்கள் முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.
சாதாரணமாக கட்டிட கழிவுகள்தான் குப்பை அதிகளவில் குவிய காரணமாக இருக்கும். இந்த ஆண்டு, புராரியில் கட்டிட கழிவுகளை மறுபயன்பாட்டுக்கும் தயாரிககும் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு கட்டிட கழிவுகள் உடனுக்கு உடன் எடுத்து செல்லப்பட்டு விடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.