தினமணி 10.11.2010
கொடைக்கானல் நகராட்சிப் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரக்கேடு
கொடைக்கானல், நவ. 9: கொடைக்கானல் நகராட்சிப் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொட்டிகளில் சேரும் குப்பைகள் நகராட்சியில் உள்ள லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படும்.
ஆனால் கடந்த 5 நாளாக கொடைக்கானல் மூஞ்சிக்கல், நாயுடுபுரம், எம்.எம்.தெரு, பெர்ன்ஹில் ரோடு, ஆனந்தகிரி தைக்கால், செண்பகனூர், அப்சர்வேட்டரி ஆகிய பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாததால் அதிலுள்ள இறைச்சிக் கழிவுகளை தெரு நாய்கள் சாலைகளில் விட்டுச் செல்கின்றன. இதனால் சாலை முழுவதும் அசுத்தமாகியுள்ளது.
மேலும் குப்பைகளில் அதிகமான நாய்கள் இருப்பதால் அந்தப் பகுதிகளில் செல்லும் பள்ளிக் குழந்தைகள், பொது மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். கொடைக்கானலில் தற்போது மழை பெய்து வரும் சூழ்நிலையில் குப்பைகளால் துர்நாற்றம் ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட உள்ளது. எனவே நகரின் பல இடங்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றக் கோரி நகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கொடைக்கானல் மக்களின் கோரிக்கையாகும்.
இது குறித்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் கூறியது:
கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமாக குப்பைகள் எடுப்பதற்கு 4 லாரிகள் உள்ளன. இதில் 2 லாரிகளுக்கு டயர்கள் வாங்கவில்லை அதனால் லாரிகள் நகராட்சி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 லாரிகள் மூலம் கொடைக்கானல் முக்கியப் பகுதிகளிலுள்ள குப்பைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டயர்கள் வாங்குவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் குப்பை லாரிகளுக்கு டயர்கள் பொருத்தப்பட்டு நகரின் அனைத்து இடங்களிலுள்ள குப்பைகள் அகற்றப்படும் என்றார்.