தினகரன் 22.11.2010
சுகாதாரமற்ற முறையில் விற்பனை 150 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்
ஈரோடு, நவ. 22:ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி கடைகளில் சுகாதாரம் அற்ற முறையில் மீன்களையும் விற்பனை செய்வதாக புகார்கள் கூறப்பட்டு வந் தது.
இதையடுத்து ஈரோடு மாநகர் நல அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமையில் மாநகர் நல அதிகாரிகள் இன்று ஈரோடு பெரியார் நகர், மரப்பாலம், நேதாஜி வீதி, மார்க்கெட், வளையக்காரவீதி, அக்ரஹார வீதி போன்ற பகுதிகளில் உள்ள ஆட்டிறைச்சி கடைகளில் விற்பனைக்காக தொங்க விட்டிருந்த இறைச்சிகளை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் முறையாக கால்நடை மருத்துவரிடம் எவ்வித பரிசோதனையும் செய்யாமலும், மாநகர் நல அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறாமலும் விற்பனை செய்யப்பட்ட 150 கிலோ எடையுள்ள ஆட்டிறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இப்பகுதிகளில் நீண்ட நாட்களாகி, கெட்டுப்போன நிலையில் மக்களால் சாப்பிட லாயக்கற்ற 30 கிலோ மீன் வகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த ஆட்டிறைச்சி மற்றும் மீன்களை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.
மாநகராட்சி நகர் நல அலுவலரின் அனுமதியின்றியும், கால்நடை வதை கூடத்தில் அதிகாரிகளின் முன்னிலையில் அறுக்கப்பட்ட இறைச்சியை முறையாக சான்று பெற்ற பிறகே விற்பனை செய்ய வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர் நல அலுவலர் ரமேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.