Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஊட்டியில் குப்பைகளை கொட்ட இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்:கலெக்டர்

Print PDF

தினகரன்             23.11.2010

ஊட்டியில் குப்பைகளை கொட்ட இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்:கலெக்டர்

ஊட்டி, நவ.23: ஊட்டியில் குப்பைகளை கொட்ட இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் தெரிவித்தார். ஊட்டி நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழப்புணர்வு கருத்தரங்கு நேற்று மாலை நடந்தது. நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரவிக்குமார், டி.ஆர்.ஓ குப்புசாமி, மாவட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், கடை உரிமையாளர்கள், வியாபார சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் மார்க்கெட் வியாபாரிகளிடம் சோதனை மேற்கொண்டு அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு ரெய்டு நடத்திட வேண்டும். மாவட்ட சீதோஷ்ண நிலை, பிற மாவட்டங்களை காட்டிலும் வேறுபட்டுள்ளது. இதனால் அனைத்து பொருட்களும் விரைவில் நமுத்து விடுகிறது. எனவே பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பொருட்களை பாதுகாப்பாக, கெட்டு விடாமல் இருக்க மாற்று பொருளை அரசு தருவிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பங்கேற்று பேசியதாவது:

பிற மாவட்டங்களை காட்டிலும் இம்மாவட்டத்தின் சீதோஷ்ண நிலை, இயற்கை, பருவ நிலை வேறுபட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்குவதால் இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இவர்கள் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அனைத்து பிளாஸ்டிக்கையும் தடை செய்ய முடியாது.

சில பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க முடியாத நிலை உள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை இம்மாவட்டத்தில் கட்டுப்படுத்த சோதனை சாவடிகளில் பறிமுதல் செய்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் பயன்படுத்தும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதனை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் கப்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளின் அருகில் அதிகளவு பேப்பர் கப் குப்பைகள் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை தடுக்கவும் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் பேப்பர் கப் குப்பைகள் அதிகளவு கிடக்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டியில் குப்பைகளை கொட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மாவட்ட காலநிலையை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மாற்று பொருள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.