தினகரன் 23.11.2010
வந்தவாசியில் சிக்குன் குனியா தடுக்க கழிவுநீர் கால்வாய்களை தூர்வார உடனடி ஏற்பாடு
வந்தவாசி.நவ.23: வந்தவாசி நகராட்சி மன்றக்கூட்டம், அதன் தலைவர் க. சீனுவாசன் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையாளர் உசேன்பாரூக் மன்னர், துணைத் தலைவர் வாசுகி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
மோகன் (திமுக):
நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளன.
தலைவர்:
தொடர்ந்து தெரு மின்விளக்குகள் பராமரிப்பு குறித்து புகார்கள் வருகிறது. போன் செய்தாலும் அவர்கள் எடுப்பது இல்லை என்கின்றனர். கவுன்சிலர்கள் விரும்பினால் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட தெருவிளக்கு பராமரிக்கும் பணியை ரத்து செய்து விடலாம்.
ரவிச்சந்திரன்:
அலுவலகத்தில் துப்புரவு ஊழியர், அலுவலக உதவியாளர், தட்டச்சு எழுத்தர் உள்ளிட்ட 26 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அனைத்து பணி களிலும் தாமதம் ஏற்படுகின்றது.
ஆணையாளர்:
காலி பணியிடம் நிரப்புவது குறித்து, மாநில நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
பாத்திமாகனி, நூர்ஜகான், பழனியம்மாள்:
நகரில் பல தெருக்களில் கால்வாயில் அடைப்பு காரணமாக மழைநீர் வெளியேறாமல் வீட்டுகளுக்குள் கழிவு நீர் புகுந்துள்ளது.
கால்வாயை தூர்வார பணியாளர்கள் வராததால் கேசவா நகர், காமராஜர் நகர் பகுதியில் சிக்குன் குனியா நோய் பரவியுள்ளது. இதனால் நகராட்சி பொறியாளர் மகாதேவன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைவர்:
நகரம் முழுவதும் கழிவுநீர் கால்வாய்கள் உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.