தினகரன் 24.11.2010
சுகாதார சீர்கேடுகள் காரணமாக நெல்லையில் உணவகம் மூடல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
நெல்லை, நவ.24: நெல்லை மற்றும் பாளை பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சுகாதார சீர்கேடுகள் பெருகி வருகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் அங்கு உணவு அருந்துபவர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காய்ச்சிய, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஓட்டல்களில் வழங்கப்பட வேண்டும். உணவினை கையாளும் பணியாளர்கள் கையுறை அணிய வேண்டும்.
ஈ மொய்க்கும் வகையிலும், தூசி படியும் வகையிலும் உணவு பொருட்களை திறந்து வைக்க கூடாது போன்ற விதிமுறைகள் ஓட்டல்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
அதையும் மீறி சில ஓட்டல்கள் சுகாதாரம் பேணாமல் உணவு பொருட்களை தயாரித்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் நேற்று உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சாகுல் அமீது, அரசகுமார், கல்யாணசுந்தரம், விக்டர், அந்தோணி, சுகாதார மேற்பார்வையாளர் பழனி, நாகராஜன், சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நெல்லை சந்திப்பு, சிந்துபூந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களை ஆய்வு செய்தனர்.
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகேயுள்ள பிரபல ஓட்டல் சமையல் அறையில் சுகாதார சீர்கேடு அதிகம் காணப்பட்டது. இதை சரிசெய்யும் வரை ஓட்டலை திறக்ககூடாது என கூறி அதிகாரிகள் ஓட்டலை மூடினர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் மதுரை சாலையில் 10 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை சந்திப்பில் உள்ள ஓட்டல்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.