தினகரன் 25.11.2010
கழுகுமலை பகுதியில் காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல் சுகாதாரத்துறையினர் அதிரடி
கோவில்பட்டி, நவ. 25: கீழஈரால் மற்றும் கழுகுமலை பகுதி கடைகளில் காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ரால்ப் செல்வின் ஆலோசனையின்பேரில் கீழஈரால் பஞ்சாயத்து மற்றும் கழுகுமலை டவுன் பஞ்சாயத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாத்தூரப்பன், கயத்தார், கழுகுமலை டவுன் பஞ்சாயத்துக்களின் உணவு ஆய்வாளர் பொன்னுராஜ், எட்டயபுரம் டவுன் பஞ்சாயத்து உணவு ஆய்வாளர் மாரிச்சாமி, சுகாதார ஆய்வாளர்கள் தி.கணேசன், சு.கணேசன், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் உணவு விடுதிகள், டீக்கடைகள், பலசரக்கு கடைகள், குளிர்பான கடைகள், மிட்டாய் தயாரிப்பு நிலையங்கள், ஆயில் மில் போன்றவைகளில் ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது கடைகளில் வர்ணம் கலந்த பலகாரங்கள் மற்றும் காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், அயோடின் இல்லாத உப்பு பாக்கெட்டுகளை கண்டறிந்து பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும் அனைத்து உணவு பொருள் பாக்கெட்டுகளின் மீதுள்ள லேபிளில் உணவு பொருளின் பெயர், சைவ, அசைவ குறியீடு, தொகுதி எண், தயாரிப்பு தேதி, உணவு பொருளில் அடங்கிய ஊட்டச்சத்து விபரம், தயாரிப்பாளரின் முழு முகவரி போன்றவை உணவு கலப்பட தடுப்பு சட்ட விதிகளின் படி இடம் பெற்றிருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். எட்டயபுரம் அருகே கீழஈராலில் கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்