Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அமைச்சர் தகவல் 8 மாநகராட்சிகளில் துப்புரவு திட்டம்

Print PDF

தினகரன்                26.11.2010

அமைச்சர் தகவல் 8 மாநகராட்சிகளில் துப்புரவு திட்டம்

பெங்களூர், நவ. 26: மாநிலத்தில் பெங்களூரை தவிர மற்ற 8 மாநகராட்சிகளை தூய்மையாக்கும் பொருட்டு புதிய துப்புரவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகர வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ். சுரேஷ்குமார் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் நகர தூய்மை திட்ட தொடக்க விழா மாநில நகர வளர்ச்சி துறை சார்பில் பெங்களூரில் நேற்று நடந்தது. திட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் பேசியதாவது:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பல்கலைகழக மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள 650 நகரங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணி காப்பது குறித்து நடத்தியுள்ள ஆய்வில் நாட்டில் சுத்தமான நகரம் என்ற பட்டியலில் மைசூருக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. மங்களூர் 8வது இடத்திலும், பெங்களூர் 12வது இடத்திலும், மண்டியா 14வது இடத்திலும், பீதர் 24வது இடத்தையும் பிடித்துள்ளன.

எதிர்க்காலத்தில் நடத்தப்படும் ஆய்வுகளில் நமது மாநிலத்தில் உள்ள நகரங்கள் முதல் வரிசையில்இடம் பெற வேண்டும். அதற்காக முயற்சியை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வளர்ச்சி திட்டம் செயல்படுத்துவதில் அரசியல் செய்யக்கூடாது. சில நகராட்சிகளில் 6 மாதங்களாகியும் சாதாரண கூட்டம் நடத்தாமல் காலம் கடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

மாநிலத்தில் சில நகராட்சிகளில் தலைவர் தேர்தல் முடிந்தும், துணைதலைவர் மற்றும் நிலைக்குழு நியமனம் செய்யாமல் பல மாதங்கள் காலம் கடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

கர்நாடக முனிசிபல் சட்டத்திற்கு உட்பட்டு எந்தெந்த சமயத்தில் என்ன நடக்க வேண்டுமோ அவை சரியாக நடக்க அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை தெளிவுபடுத்த வேண்டும். கழிவுநீர் கால்வாய்களில் மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் இயந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும்.

மாநிலத்தில் 36 நகரசபைகளில் மனிதர்கள் கழிவு அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இது விரைவில் மாற்றம் செய்யப்படும். மனித கழிவை மனிதன் சுமப்பதை தடுக்கும் சட்டம் 2008ல் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் இப்பணியில் ஈடுபட்டிருந்த 440 பேருக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் நிர்மல கங்காஎன்ற பெயரில் துப்புரவு திட்டம் செயல்படுத்தும் திட்டத்தை மாநில அரசின் உதவியுடன் மேற்கொள்ளும் திட்டத்தை மத்திய நகர வளர்ச்சிதுறை தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தில் பெங்களூரை தவிர தும்கூர், பெல்காம், குல்பர்கா, தாவணகெரே, மைசூர், மங்களூர், ஹூப்ளி &தார்வார், பெல்லாரி மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். பாதாளச்சாக்கடைகள் இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தப்படும் என்றார்.