தினமலர் 28.11.2010
குப்பை சேகரம் செய்யும் பணி, கம்பம் நகராட்சியில் தனியார்மயம்கம்பம்
: கம்பத்தில் குப்பை சேகரம் செய்யும் பணிகளை தனியார் மயமாக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. தனிநபர் வீட்டு கழிப்பறைகள் 73 சதவீதம் உள்ளது. 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் விதிகளுக்குட்பட்ட கழிப்பறைகள் கிடையாது. சாக்கடையை பொறுத்தவரை 104 கி.மீ., தூர நீளத்திற்கு செல்கிறது. பழுதான, பராமரிக்கப்படாத சாக்கடைகளே அதிகம். இதனால் கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது. தினமும் 22 மெட்ரிக் டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. ஒருநபர் 400 கிராம் வரை குப்பைகளை உருவாக்குவதாக நகராட்சி கூறுகிறது. குப்பைகளை அள்ளுவதோ, அள்ளிய குப்பைகளை குப்பை கிட்டங்கியில் கொண்டு சென்று சேர்ப்பதோ இல்லை. இதனால் பல தெருக்களில் துர்நாற்றம் வீசி வருகிறது.பணியிடம் காலி: நகராட்சியில் அனுமதிக்கப்பட்ட(20 ஆண்டுகளுக்கு முன்) துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை 135 ஆகும். தற்போது 24 பணியிடங்கள் காலியாக உள்ளது. மக்கள் தொகை, நகர் விரிவாக்கம் போன்றவற்றை கணக்கில் கொண்டால், துப்புரவு பணியாளர்கள் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். நகராட்சியின் செலவு, வருவாயில் 49 சதவீதத்தை தாண்டுவதால் புதிய பணியாளர்களை நியமிக்க முடிவதில்லை. முடிவு: குப்பை சேகரம் செய்யும் பணியை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 24 பணியிடங்களுக்கு மாதந்தோரும் வழங்கப்படும் சம்பளம் ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 984 என்றும், அதற்கு தகுந்தாற்போல, டெண்டர் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு துப்புரவு பணியாளருக்கு நாள் ஒன்றிற்கு கூலியாக ரூ. 123 தர மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.