தினகரன் 01.12.2010
வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை
திருமங்கலம், டிச.1: ஒரு வாரமாக மழைநீர் சூழ்ந்துள்ள திருமங்கலம் குடியிருப்பு பகுதியில் கால்வாய் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
தொடர் மழையால் திருமங்கலம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி வழிகின்றன. இதிலிருந்து வெளியேறிய தண்ணீர் திருமங்கலத்தில் மம்சாபுரம், அண்ணா நகர், அசோக் நகர், என்.ஜி.ஓ. நகர், குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்தது.
கலெக்டர் காமராஜ் உத்தரவின் பேரில் தண்ணீர் தேங்குவதற்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்பேரில் 67 வீடுகள் முற்றிலுமாக இடிக்கப்பட்டன. 250 வீடுகள் பகுதியாக அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பை அகற்றியதால் குவிந்த செங்கல், மண் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை உடனே அகற்ற சாலையோரம் ஜே.சி.பி. மூலம் கால்வாய் தோண்டும் பணி நடக்கிறது.
திருமங்கலம் தாலுகா காவல்நிலையத்திலும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வட்டார வள மையக் கட்டிடம் ஆகியவற்றை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அரசு பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், காவல்நிலையம், வட்டார வள மையத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.