தினமலர் 03.12.2010
நெல்லை டவுனில் அதிகாரிகள் சோதனை உப்பு, ஈ மொய்த்த வடைகள் பறிமுதல்
திருநெல்வேலி : நெல்லை டவுன் பகுதியில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அயோடின் இல்லாத உப்பு, திறந்த வெளியில் விற்பனை செய்யப்பட்ட வடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவுப்படி, சுகாதார அலுவலர் (பொ) சாந்தி அறிவுரைப்படி உணவு ஆய்வாளர் கலியனாண்டி, சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சண்முகசுந்தரம் (பொ), மேற்பார்வையாளர்கள் ஜானகிராம், வேல்முருகன், சிங்கராஜன் அடங்கிய குழுவினர் நெல்லை டவுன் ரதவீதிகளில் ஓட்டல்கள், திறந்த வெளி உணவகங்களில் திடீர் சோதனை நடத்தினர். நெல்லை டவுன் கீழரதவீதி, வடக்குரதவீதியில் திறந்தவெளியில் டீக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த வடை தினுசுகளை பறிமுதல் செய்தனர். அயோடின் இல்லாத உப்பு 2 மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு வெந்நீர் வழங்கவேண்டும் எனவும், சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கவேண்டும் எனவும், திறந்த வெளியில் உணவு பண்டங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் ஓட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 40க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.