தினமணி 07.12.2010
சென்னையில் 30 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்: மேயர் தகவல்
சென்னை, டிச.7: சென்னையில் 30 இடங்களில் 100 மருத்துவர்களுடன் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக மேயர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் குடிசைப் பகுதிகளிலும், மழைநீர் தேக்கம் இருந்த பகுதிகளிலும் இன்று நடத்தப்படுகிறது. மேயர் மா.சுப்பிரமணியன் தேனாம்பேட்டை எஸ்.எம். நகரிலும், துறைமுகத்தில் அன்னை சத்தியா நகரிலும், சைதாப்பேட்டையிலும் 10-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், மழைக்காலம் என்பதால் குடிசைப்பகுதிகளிலும், மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளிலும் 30 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் 100 மருத்துவர்களுடன் நடத்தப்படுகிறது. அதேபோன்று தேவைப்படும் இடங்களில் 10 நடமாடும் ஊர்திகள் மூலம் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றிற்கு இலவசமாக மாநகராட்சி சார்பில் மாத்திரைகள், மருந்துகள் வழங்கப்படுகின்றன என அவர் கூறியதாக மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.