தினமணி 08.12.2010
பன்றி வளர்ப்போருக்கு எச்சரிக்கை
மதுரை, டிச. 7 : மதுரை மாவட்டத்தில் பன்றி வளர்க்கும் உரிமையாளர்கள் பன்றிகளை பொது இடங்களில் சுற்றித் திரிவதை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தெரிவித்துள்ளதாவது:
பொதுமக்கள் கூடும் இடம், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், சுகாதார வளாகங்கள், பஸ் நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், தொற்றுநோய் பரவும் விதமாகவும் பன்றிகள் சுற்றித் திரிவதாக புகார்கள் வருகின்றன.
நகர்ப்புறங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிப் பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிந்தால், சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் பன்றிகளைப் பிடித்து அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, பொது இடங்களில் பன்றிகள் சுற்றித் திரிவதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதை மீறும் உரிமையாளர்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.