தினமலர் 13.12.2010
நோயுற்ற ஆடுகளை இறைச்சிக்கு வெட்டத்தடை
உசிலம்பட்டி:உசிலம்பட்டி பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஆடுகளுக்கு காணை நோய் தாக்கியுள்ளது. நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஆடுகளை இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க, உசிலம்பட்டி பகுதியில் விற்கப்படும் ஆட்டிறைச்சிகளில் நகராட்சி நவீன இறைச்சிக்கூடத்தில் வதை செய்யப்பட்ட ஆட்டிறைச்சிகளை மட்டும் விற்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் சரவணகுமார் அறிவித்திருந்தார். இறைச்சிக்கூடத்தில் வதை செய்யப்படும் ஆடுகளை சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் சோதனை நடத்தியபின் வதை செய்யப்படுகின்றது. நேற்று இறைச்சிக்கூடத்திற்கு இறந்த ஆடு, நோய்வாய்ப்பட்ட ஆடுகளை வதை செய்ய முயற்சி செய்தனர். இறந்த ஆட்டை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் நோயுற்ற ஆட்டை வதை செய்யக் கொண்டு வந்த துரைச்சாமிபுரம் பரமன் என்பவரிடம் ஆட்டை உரிய சிகிச்சைக்கு கொண்டு செல்லும்படி நகராட்சி பணியாளர்கள் வலியுறுத்தினர்.நோயுற்ற ஆடுகளை இறைச்சிக்காக வெட்டி விற்க முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.