Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை பணி

Print PDF

தினமலர்           15.12.2010

அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை பணி

ஈரோடு: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 1.67 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை திட்டப் பணி துவங்கியுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஈரோடு மட்டுமின்றி, சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்ட பகுதியிலிருந்தும் 3,000க்கும் அதிகமானோர் சிகிக்சைக்காக வந்து செல்கின்றனர். தினமும் 600க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகள் நலச் சங்கம் சார்பில், மருத்துவமனைக்கு தேவையான நவீன உபகரணங்கள், கட்டில்கள் உள்பட கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு இணையாக செயல்படுகிறது. காசநோய், தொற்று நோய் பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு, கண், பொது பிரிவு, குழந்தைகள் பிரிவு, பன்றி காய்ச்சல் பிரிவு, சித்த மருத்துவம் உள்பட சிறப்பு பிரிவுகள் உள்ளன. மருத்துவமனை வளாத்தில் கழிவுநீர் செல்ல, முறையாக சாக்கடை வசதியின்றி, ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி, சுகாதாரக் கேடாக காட்சியளிக்கிறது. சென்ற மாதம் சித்தாபிரிவு அருகே அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்க் நிரம்பி, அதிலிருந்த கழிவு குட்டையாக தேங்கியது.

அப்பகுதி முழுவதும் சுகாதாரக் கேடானது. கழிவுநீர் முறையாக செல்லாததால், தொற்றுநோய் ஏற்படுத்தும் கொசுக்கள் அதிகளவு பெருகுகின்றன. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வரும் நோயாளிகள், கூடுதலாக தொற்று நோயையும் பெற்று செல்லும் நிலை ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மருத்துவமனை வளாகம் முழுவதையும் ஒருங்கிணைத்து, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 1.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு, பணியும் துவங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அலுவலகத்திலிருந்து, பிரேத பரிசோதனை கூடம் வரை உள்ள அனைத்து கட்டிடங்களிலும் உள்ள கழிவறை மற்றும் கழிவு நீர் குழாய்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, பூமிக்கடியில் குழாய்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. பிரேத பரிசோதனைக் கூடம் அருகே பெரிய கீழ்நிலை தொட்டி அமைத்து, கழிவுநீர், கழிவு சேகரிக்கப்படுகிறது. இவற்றை சுத்திகரித்து, சாக்கடையில் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.