Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சிப் பகுதிகளில் திடீர் சோதனை: ரூ.3 லட்சம் காலாவதி பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 31.08.2009

நகராட்சிப் பகுதிகளில் திடீர் சோதனை: ரூ.3 லட்சம் காலாவதி பொருள்கள் பறிமுதல்

நாமக்கல், ஆக. 30: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் நடந்த சோதனையில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான காலாவதி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகராட்சிப் பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஹோட்டல், டீ கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் காலாவதியான உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து ஒரே நாளில் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதன்படி, மாவட்ட வழங்கல் அலுவலர் து. ரவீந்திரன் மேற்பார்வையில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை ஒரே நாளில் சோதனை நடத்தப்பட்டது.

பேருந்துநிலையப் பகுதிகளில் உள்ள கடைகள், பிரதான சாலைகளில் உள்ள கடைகளில் அந்தந்த நகராட்சி சுகாதார அலுலர்கள், உணவு ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் சோதனையிட்டதில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், உணவுப் பொருள்கள், தரமற்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், நுகர்வோருக்கு கெடுதல் விளைவிக்கும் வகையிலான பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.