தினமணி 01.08.2012
தேனி, கம்பம் பகுதிகளில் உணவுப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை
தேனி, ஜூலை 31: தேனி, கம்பம் நகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்திய உணவுப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள், மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பிலான காலாவதியான மற்றும் தரமற்ற குழந்தைகள் உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட உணவுப் பொருள் கட்டுப்பாட்டு நியமன அலுவலர் ராஜா, ஆய்வாளர்கள் அறிவுச்செல்வம், மதன்குமார், பாலமுருகன், ஜனகன் ஆகியோர் தேனி, கடற்கரை நாடார் தெருவில் உள்ள மிட்டாய்,பிஸ்கட் உள்ளிட்ட சிறுவர்களுக்கான உணவுப் பொருள்கள்மொத்த விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தினர்.
அதில், 3 கடைகளில் இருந்து தயாரிப்பாளர் முகவரி மற்றும் தயாரிப்பு தேதி அச்சிடப்படாத உணவுப் பொருள் பாக்கெட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள் பாக்கெட்களை பறிமுதல் செய்து, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
இதேபோன்று, கம்பம் வாரச்சந்தை வளாகத்தில் உள்ள மிட்டாய் விற்பனைக் கடைகளில் சோதனை நடத்திய அதிகாரிகள், விற்பனைக்கு வைத்திருந்த காலாவதியான, தரமற்ற உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.இந்த சோதனையில் மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.