மாலை மலர் 04.08.2012
மதுரையில் குப்பை லாரிகளில் இருந்து ரோடுகளில் குப்பை விழாமல் தடுக்க நடவடிக்கை: மேயர் ராஜன்செல்லப்பா பேட்டி
மதுரை, ஆக. 4-மதுரை மாநகராட்சி பகுதிகளை மாசில்லா மதுரை என்ற திட்டத்தின் மூலம் மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் துப்புரவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வார்டுகள் வாரியாக துப்புரவு பணிகள் நடந்து வரும் நிலையில் இன்று மதுரையில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களான பெரியார் பஸ் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் மற்றும் தெப்பக குளம் மாரியம்மன் கோவில் பகுதிகளில் துப்புரவு பணி நடந்தது.
இந்த பணிகளை மேயர் ராஜன்செல்லப்பா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சியை தூய்மையாக நகராக மாற்ற முதல்வர் அம்மா ஆலோசனையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாசில்லா மதுரை என்ற திட்டத்தை செயல்படுத்தி பகுதி வாரியாக தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இன்று முக்கிய பஸ் நிலையங்கள் தூய்மைப் படுத்தப்பட்டுள்ளன. குப்பைகள் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. அப்படி செல்லும் லாரிகளில் இருந்து குப்பைகள் ரோடுகளில் விழுவதாக புகார்கள் வருகின்றன. எனவே அதனை தடுக்கும் வகையில் குப்பை லாரிகளில் விலையுயர்ந்த தார்ப்பாய் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் துப்புரவு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு மதுரை மாசில்லாத நகரமாக உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேயருடன் கமிஷனர் நந்தகோபால், தெற்கு மண்டலத்தலைவர் சாலை முத்து, மேற்கு மண்டலத் தலைவர் ராஜபாண்டியன், உதவி கமிஷனர் தேவதாஸ், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல், கவுன்சிலர்கள் குமுதா, குமார், வக்கீல் ரமேஷ், நிலையூர்முருகன், திடீர்நகர் பால்பாண்டி உள்பட பலர் உடன் சென்றனர். இந்த துப்புரவு பணியின் போது பெரியார் பஸ் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலைய பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. மதுரை பீ.பி.சாவடி பகுதியில் மேற்கு மண்டலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் துப்புரவு பணி நடந்தது.