தினமணி 24.08.2012
பண்ருட்டியில் ரூ.28 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் பணி
பண்ருட்டி, ஆக. 23: பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற திருச்சி சாலை மற்றும் சென்னை சாலையில் ரூ.28 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
÷பண்ருட்டி நகரின் மையப்பகுதியாகவும், சென்னை-கும்பகோணம் மற்றும் கடலூர்-சித்தூர் சாலை சந்திக்கும் இடமாகவும் நான்கு முனை சந்திப்பு உள்ளது. மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகரித்து காணப்படும்.
÷மழை நீர் வழிந்தோட நான்கு முனை சந்திப்பு பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் மழை காலத்தில் மழை நீர் செல்ல வழியின்றி கடலூர்-சித்தூர் சாலையில் பஸ் நிலையம் முதல் ரங்கா பில்டிங் வரையிலும், சென்னை-கும்பகோணம் சாலையில் மார்கெட் முதல் கிளை சிறை வரையிலும் முழங்காலுக்கு மேல் மழை மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கும்.
÷தேங்கி நிற்கும் இந்நீரால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மழை நீர் தேங்கி நிற்காத வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொது நல அமைப்புகள் பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.
÷இக்கோரிக்கைகளை ஏற்று ரூ.28 லட்சம் மதிப்பில் சென்னை சாலையில் 1.5 மீட்டர் அகலத்தில், 150 மீட்டர் நீளத்துக்கு கழிவுநீர் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் திருச்சி சாலையில் (சித்தூர் சாலை) 90 மீட்டர் நீளத்துக்கு கால்வாய் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
÷சென்னை சாலையில் அமைக்கப்படும் கழிவு கால்வாயால் இனி நான்கு முனை சந்திப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்க வாய்ப்பில்லை என நகராட்சிப் பொறியாளர் ஆர்.ராதா கூறினார். பணி மேற்பார்வையாளர் சாம்பசிவம் உடனிருந்தார்.