தினமணி 24.08.2012
சாரதி மாளிகையில் மேயர் ஆய்வு
வேலூர், ஆக. 23: வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள சாரதி மாளிகையில் மேயர் பி.கார்த்தியாயினி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் சாரதி மாளிகையில் 3 தளங்களில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சி மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் தண்ணீர் பிரச்னை, சுகாதாரச் சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து வந்தன. இதையடுத்து மேயர் கார்த்தியாயினி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அவருடன் நகரமைப்பு அதிகாரி கண்ணன், நகர்நல அலுவலர் பிரியம்வதா, மாநகராட்சி உறுப்பினர்கள் கோதண்டபாணி, அன்பு, துரையரசன் ஆகியோர் உடன் சென்றனர்.
ஆய்வுக்குப் பிறகு மேயர் கார்த்தியாயினி செய்தியாளர்களிடம் கூறியது:
சாரதி மாளிகையில் சேதமடைந்த சிமென்ட் சிலாப்புகள் உடனே செப்பனிடப்படும். தண்ணீர் பிரச்னையை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சாரதி மாளிகை எதிரேயுள்ள கால்வாய் தூர்வாரப்படும். மேலும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் இரவில் காவலர் நியமிக்கப்பட்டு சாரதி மாளிகையிலுள்ள அனைத்து நுழைவாயில்களும் பூட்டப்படும் என்றார் அவர்.