தினமலர் 31.08.2012
அனுமந்தன்பட்டியில் சிக்குன் குனியா தடுப்பு நடவடிக்கையில் பேரூராட்சி
உத்தமபாளையம்:அனுமந்தன்பட்டியில் சிக்குன்-குனியாவை தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தமபாளையம் ஒன்றியம் அனுமந்தன்பட்டியில், சில நாட்களுக்கு முன் விஷக் காய்ச்சல் பரவியது. ரத்த மாதிரி பரிசோதனையில் சின்குன்-குனியா என்பது உறுதியானது. இதில் பலர் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில், சிக்குன்-குனியாவை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பேரூராட்சி தலைவர் மலர்விழி கூறியதாவது: குடிநீர் தொட்டிகள், சின்டெக்ஸ்கள் தினமும் சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்படுகிறது. வெளியூர்களிலிருந்து 25 க்கும் அதிகமான துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு ஊர் முழுவதும் சாக்கடைகள், கழிப்பிடங்கள், தெருக்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. சுகாதாரத்துறையுடன் இணைந்து நோய் பரப்பும் கொசுக்களை அழிக்கும் அபேட், பைரித்ரம் மருந்துகள் குடிநீர் தொட்டிகளிலும், ஊர் முழுவதும் தெளிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் சுகாதார செவிலியர்களால் விழிப்புணர்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிகுறி உள்ளவர்களை கண்காணித்து, வீடுதேடிச் சென்று மருந்து மாத்திரைகள் வழங்குகிறோம்,என்றார்.