தினமலர் 03.09.2012
தெருநாய்களுக்கு தனி இடம் திண்டுக்கல் நகராட்சி முடிவு
திண்டுக்கல்:ஆர்.எம்.காலனி சுடுகாடு வளாகத்தில் தெரு நாய்களுக்காக தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் நகராட்சி பகுதியில், தெருநாய்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் சிலர் தெருநாய்களுக்கு ஆதரவாக இருப்பதால் அதிக எண்ணிக்கை காணப்படுகிறது.இதனால் ஆர்.எம்., காலனிபகுதியில், மக்கள் ரோடுகளை கடந்து செல்லவே அச்சப்படும் அளவிற்கு உலா வருகின்றன.தெருநாய்களை அகற்ற நகராட்சி தலைவர் மருதராஜிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்தனர்.ஆர்.எம்.காலனி பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்கள் னைத்திற்கும் வெறிநோய் தடுப்பு ஊசி போடப்பட்டிருப்பதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் கருத்து தெரிவித்திருந்தனர். தெருநாய்கள் தொல்லையை தவிர்க்க, சுடுகாடு வளாகத்தில் காம்பவுண்ட் சுவருடன் தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தெருநாய்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் இந்த வளாகத்தில் வைத்து அவற்றிற்கு உணவளித்து பராமரிக்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.