தினமணி 02.03.2013
மீஞ்சூரில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு
சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகளை மீஞ்சூர் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கே.வீரராகவராவிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
மீஞ்சூர் சுற்று வட்டார மக்கள் நலக் கூட்டமைப்பினர் சார்பில் இந்த மனு வழங்கப்பட்டது.
பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள தோட்டத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேரும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து மீஞ்சூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான இந்த குப்பை கொட்டும் திட்டத்தை கைவிடக்கோரி அப்பகுதி மக்கள் 30 ஆயிரம் பேர் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டனர்.
அந்த மனுவை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் மீஞ்சூர் சுற்றுவட்டார மக்கள் நலக் கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் எதிர்ப்புகளை அரசுக்கு தெரியப்படுத்தி மாற்று இடம் பரிந்துரைக்கப்படும் என கூறினார்.