தினமணி 13.03.2013
நாய்களுக்கு கருத்தடை: விழிப்புணர்வுப் பேரணி
திருமழிசை பேரூராட்சி சார்பில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆத்துக்கால் தெருவில் தொடங்கிய இப்பேரணி, நகரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்ற பின் மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.
பேரூராட்சித் தலைவர் அமுதா முனுசாமி பேரணியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பேரணியில் பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் தெரு நாய்களுக்கு அறிவியல் ரீதியில் கருத்தடைச் செய்வது, ரேபிஸ் நோயில் இருந்து பாதுகாத்தல் உள்ளிட்டவற்றை குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன.
மேலும் வரும் 15-ம் தேதி பேரூராட்சி நிர்வாகம், புளுகிராஸ் அமைப்பு சார்பில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யும் முகாம் நடைபெறவுள்ளது.