தினமணி 25.03.2013
மகப்பேறு உதவித் திட்டம்: 84% பேருக்கு தொகை வழங்கல்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தில் கோவை மாநகராட்சிப் பகுதியில் 83.58 சதவீதம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு ரூ.4,000 வீதம் 3 தவணைகளில் ரூ.12 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
கோவை மாநகராட்சியில் நடப்பு ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5.33 கோடி. இதில் பிப்ரவரி மாதம் முடிய ரூ.3.90 கோடி அரசு கருவூலத்தில் இருந்து பெறப்பட்டு கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ரூ.1.43 கோடி நிதியில் கருவுற்ற தாய்மார்களின் பணப் பயனுக்குத் தகுதி வாய்ந்த விவரங்கள் கணினி மூலம் பதியப்பட்டுள்ளது. இந்த விவரங்களைக் கருவூலத்தில் செலுத்த ரூ.55.76 லட்சத்துக்கான பயனாளிகள் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. கோவை மாநகராட்சியில் 83.58 சதவீதம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீட்டில் மீதியுள்ள ரூ.88 லட்சத்துக்காக கர்ப்பிணிகளின் தகுதி வாய்ந்த விவரங்கள் நகர் நல மையப் பகுதி சுகாதார செவிலியர்கள், கணினி மூலம் பதிவு செய்து பயனாளிகள் பட்டியல் தயார் செய்ய நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.