தினமணி 17.09.2009
பைக்காரா, பழங்காநத்தம் சுகாதார மையங்களை சீரமைக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு .
மதுரை, செப். 16: மதுரையில் உள்ள பைக்காரா மற்றும் பழங்காநத்தம் மாநகராட்சி சுகாதார மையங்களை சீரமைத்துப் புதுப்பிக்க ஆணையர் எஸ். செபாஸ்டின் உத்தரவிட்டார்.
மேற்கண்ட சுகாதார மையங்களை புதன்கிழமை ஆய்வு செய்த பின்னர், பழுதடைந்த நிலையில் இருந்த அதன் கட்டடங்களை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:
மதுரை மாநகராட்சியில் 17 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் 12 மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தடுப்பூசி போடுதல், குடும்பக் கட்டுப்பாடு செய்தல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
பைக்காரா, பழங்காநத்தம் ஆகிய சுகாதார மையங்களின் பழுதடைந்த கட்டடங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்படும் என்றார் ஆணையர்.