தினமணி 19.09.2009
சிவகாசியில் முன்மாதிரி கழிவு நீர் வாய்க்கால்
சிவகாசி, செப். 18 சிவகாசியில் முன்மாதிரியான கழிவுநீர் வாய்க்காலை நகராட்சி அமைத்துள்ளது .
சிவகாசி நகராட்சி 16 மற்றும் 17-வது வார்டு பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு, மழைகாலங்களில் தண்ணீர் செல்ல இயலாத நிலை இருந்து வந்தது. மேலும் கோடைகாலங்களில் தண்ணீர் தேங்கி கொசுஉற்பத்தியாகி பல வியாதிகளுக்கு வழிவகுத்துவந்தது.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம்,ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் எளிதாக வெளியேறும் வகையில் வாய்கால் அமைக்க முடிவு செய்தது. பகுதி 2 திட்டம் 2008-2009ன் கீழ் நீர்நிலை கால்வாய்கள் மேம்படுத்துதல் திட்டத்தில், பசும்பொன் சாலை பாலத்திலிருந்து, காத்தான் தெருசாலை வரை ரூ.26.41 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இது குறித்து நகர்மன்ற துணைத் தலைவர் ஜி.அசோகன் கூறியதாவது: இந்த வாய்கால் அமைக்க பல எதிர்ப்புகள் இருந்தன. அதை சரி செய்து அமைக்கப்பட்டதும் அந்தப் பகுதி மக்கள் மிகவும் பாராட்டுகிறார்கள். மேலும் அப்பகுதி மக்கள் யாரும் வீட்டுக் குப்பைகளை வாய்காலில் கொட்டுவதில்லை என்றார்.