தினமணி 22.09.2009
பாதாளச் சாக்கடைத் திட்ட பணிகள் துவக்கம் .
கோவை, செப்.21: கோவை மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.377 கோடியில் செயல்படுத்தப்படும் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கான பணிகள் திங்கள்கிழமை துவங்கியது.
ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, மேயர் ஆர்.வெங்கடாசலம், ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக் ஆகியோர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியைத் துவக்கி வைத்தனர் (படம்).
கோவை மாநகராட்சியில் உள்ள 72 வார்டுகளில் ஏற்கெனவே 30 வார்டுகளில் பாதாளச் சாக்கடை வசதி உள்ளது. விடுபட்ட வார்டுகளுக்கும் இத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் ரூ.377 கோடியில் ஜவாஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தில் இவ்வசதி கொண்டு வரப்படுகிறது.
திட்ட செயல்பாட்டுக்காக மாநகராட்சியின் வார்டுகள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 6 மண்டலங்களில் ரூ.191 கோடியில் சோதனைக் குழிகள், கழிவுநீர் குழாய்கள் பதிக்க பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி 510 கி.மீ.க்கு கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் பதிக்கப்படும். 18 ஆயிரத்து 750 இடங்களில் சோதனைக் குழிகள், 680 கி.மீ. நீளத்திற்கு வீட்டு இணைப்புக் குழாய்கள் அமைக்கப்படும். இப்பணிகளை இரண்டரை ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் இப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு 3 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி ஏற்கெனவே துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
பாதாளச் சாக்கடைத் திட்ட பணிகள் துவக்க நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் சி.பத்மநாபன், எஸ்.எம்.சாமி, வி.பி.செல்வராஜ், ப.பைந்தமிழ், சுகாதாரக் குழுத் தலைவர் பி.நாச்சிமுத்து, எதிர்க் கட்சித் தலைவர் வெ.ந.உதயகுமார், கல்விக் குழுத் தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.