தினமணி 23.09.2009
செய்யாறில் ரூ.27.7 கோடியில் புதை சாக்கடை
திருவண்ணாமலை, செப்.22: செய்யாறு நகராட்சியில் ரூ.27.7 கோடி செலவில் புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையில் உள்ள செய்யாறு நகராட்சி முக்கிய வர்த்தக மையமாக விளங்குகிறது. மொத்தம் 27 வார்டுகள் உள்ள இந்நகராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
நகரில் புதை சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.
அமைச்சர் எ.வ.வேலு, ஆட்சியர் மு. ராஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்ட தீவிர முயற்சியை அடுத்து புதை சாக்கடைத் திட்டத்தை ரூ.27.7 கோடியில் செயல்படுத்த தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சச்சிதானந்தம் கூறியது:
இத்திட்டம் 2 கட்டங்களாக நிறைவேற்றப்படும். முதல் கட்டத்தில் 15 வார்டுகளிலும், இரண்டாம் கட்டத்தில் 12 வார்டுகளிலும் திட்டம் செயல்படுத்தப்படும். 45.95 கி.மீ நீளத்துக்கு குழாய்கள் பொருத்தப்படும்.
மேலும் எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் செலவில் பல்வேறு சாலை பணிகள், வடிகால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
செய்யாறு பஸ் நிலையத்தில் சிமெண்ட் சாலைகள் போடுதல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளும் நடைபெறும் என்றார்.