Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் 2,500 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்

Print PDF

தினமணி             17.06.2013

சென்னையில் 2,500 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்

ஆம்னி பஸ்களில் கொண்டு வரப்பட்ட தரமற்ற மாட்டு இறைச்சியை பெரியமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றிய  மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
ஆம்னி பஸ்களில் கொண்டு வரப்பட்ட தரமற்ற மாட்டு இறைச்சியை பெரியமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றிய  மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

சென்னையில் 2,500 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அழித்தனர்.

வெளிமாநிலங்களில் இருந்து தரமற்ற மாட்டிறைச்சி சென்னைக்கு கொண்டுவரப்படுவது தொடர் கதையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ரயில்களில் தரமற்ற இறைச்சி கொண்டுவரப்பட்டன. ரயில்களில் கொண்டுவரப்படும் இறைச்சிகள் அவ்வப்போது பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு வந்தன.

இதனையடுத்து சாலை வழியாக இறைச்சி கொண்டு வரப்படுவது அதிகரித்தது. இந்ந நிலையில் 2,500 கிலோ மாட்டிறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியது: சென்னைக்கு தனியார் பஸ்கள் மூலம் தரமற்ற மாட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனை கண்டுபிடிக்க பலமுறை முயற்சி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேப்பேரி பகுதியில் வந்து கொண்டிருந்த இரண்டு ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனை செய்ததில், மூட்டைகளில் கட்டப்பட்ட சுமார் 2,500 கிலோ மாட்டிறைச்சி இருந்தது. இதனை பரிசோதனை செய்ததில் அவை கெட்டுப்போனவை என்று தெரியவந்தது.

இதனையடுத்து அந்த இறைச்சி கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகத்தில் அழிக்கப்பட்டது. இறைச்சியை கடத்தி வந்த இரண்டு பஸ்களும் கர்நாடக மாநில பதிவு எண் கொண்டவை. அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் எச்சரிக்கப்பட்டனர். இந்த இறைச்சி வாணியம்பாடியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த இறைச்சி சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகளில், ஆட்டிறைச்சியுடன் கலந்து விற்கப்படுவதாக தெரிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.