தினமணி 25.06.2013
பூங்காக்களில் உடற்பயிற்சிக் கூடங்கள்: புது தில்லி முனிசிபல் கவுன்சில் திட்டம்
புது தில்லி முனிசிபல் கவுன்சில் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க கவுன்சில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பல தரப்பட்ட வயதினரும் பூங்காக்களுக்கு வந்து செல்வதாலும், வழக்கமான உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லாததாலும், பூங்காக்களில் திறந்தவெளியில் உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க முடிவு செய்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது:
பெரியவர்கள் உடற்பயிற்சிக் கருவிகளைப் பயன்படுத்தி பயிற்சி செய்ய விரும்புகின்றனர். சிறு வயதினரும் உடற்பயிற்சி செய்ய ஆசைப்படுகின்றனர்.
இரு தரப்பினரும் பூங்காக்களுக்குச் செல்கின்றனர் என்பதால், அங்கு உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க முனிசிபல் கவுன்சில் விரும்புகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.