தினமணி 25.09.2009
டீக்கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு
கரூர், செப்.24: கரூர் பகுதிகளிலுள்ள டீக் கடைகளில் நகராட்சி சுகாதாரத் துறையினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
கரூர் பகுதிகளிலுள்ள டீக்கடைகள், மளிகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் டீத்தூள்களின் தரத்தைப் பரிசோதனை செய்ய தமிழக சுகாதாரத் துறையிடமிருந்து உத்தரவு வரப்பெற்றது. இதையடுத்து கரூர் நகராட்சி ஆணையர் ஆர். ரமணி, சுகாதார நகர் நல அலுவலர் கே. சந்தோஷ்குமார், ஆய்வாளர்கள் செல்வம், தேவராஜ், முத்தையா, செந்தில் ஆகியோர் கரூர் பகுதிகளிலுள்ள டீக்கடைகள், மளிகைக் கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில், சந்தேகப்படும்படியான டீத்தூள்களின் மாதிரிகளை சேகரித்தனர். அவைகள் பாளையங்கோட்டையிலுள்ள உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனையில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கலப்படப் பொருள்களை விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆணையர்.