தினமலர் 12.07.2013
பொன்னேரி பேரூராட்சியில் சுகாதார தூய்மை பணி முகாம்
பொன்னேரி:ஒட்டுமொத்த சுகாதார தூய்மை பணி முகாம், பொன்னேரி பேரூராட்சியில் துவக்கி வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஒட்டு மொத்தமாக சுகாதார தூய்மை பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் ஏற்பாடு செய்ய, ஆட்சியர் வீர ராகவராவ் உத்தரவு பிறப்பித்தார்.
இதன் மூலம், ஒவ்வொரு பேரூராட்சியிலும்,மற்ற பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து,ஐந்து நாள் துப்புரவு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
மேற்கண்ட தூய்மை முகாம், பொன்னேரி பேரூராட்சியில், தலைவர் தனலட்சுமி தலைமையில், செயல் அலுவலர் (பொறுப்பு) சந்திரகுமார் முன்னிலையில் நேற்று நடந்தது.
வணிக வரித் துறை அமைச்சர் ரமணா கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆட்சியர் வீரராகவ ராவ், திருவள்ளூர் தொகுதி எம்.பி., வேணுகோபால், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜா ஆகியோர் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
இதில், பொன்னேரி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், ஆரணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய பேரூராட்சிகளின் ஊழியர்கள், 60 பேர் பங்கேற்று, பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்துவது, குப்பையை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற் கொண்டனர்.
இந்த முகாம், பொன்னேரி பேரூராட்சியில் ஐந்து நாட்களுக்கு நடைபெறும் என, பேரூராட்சி தரப்பில் கூறப்பட்டது. பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலர் பார்த்திபன், வட்டாட்சியர் சாகீர் சலீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.