தினகரன் 08.08.2013
நகராட்சியில் பன்றி வேட்டை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிவதால் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து அடிக்கடி புகார் எழுந்தது. இதையடுத்து நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் உத்தரவின் பேரில் நகராட்சி ஆனையாளர் சுந்தராம்பாள் தலைமையில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான டீச்சர்ஸ் காலனி, பொட்டுமேடு, மரப்பேட்டை வீதி, ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்றனர், அப்போது நகர் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் சுற்றித்திரிந்த 17 பன்றிகளை நகராட்சி பணியாளர்கள் உதவியோடு பிடித்து நகரின் எல்லைபகுதியில் கொண்டு சென்று அப்புறப்படுத்தனர்.
பன்றிகளை நகர் பகுதியில் இருந்து 0.5 கிமீ தூரத்தில் வளர்க்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் வர விடக்கூடாது, பன்றிகளை பட்டியில் தான் வளர்க்க வேண்டும். பட்டியில் மாதம் ஒருமுறை கிருமி நாசினி மருந்தை அடிக்க வேண்டும். பன்றி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நகராட்சி அதிகாரிகள் பன்றி வளர்ப்பில் ஈடுபடுவோர்களுக்கு விதித்துள்ளனர். சுகாதாரமற்ற முறையில் பன்றிகளை வளர்த்தாலோ, நகர் பகுதியில் வளர்த்தாலோ பன்றிகள் அப்புறப்படுத்தப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.