தினமணி 14.08.2013
ஆம்பூரில் தீவிர கொசு ஒழிப்புப் பணி
ஆம்பூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சிப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவையற்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள நீர் ஆகியவற்றை அப்புறப்படுத்துகின்றனர். தண்ணீர் சேமித்து வைக்கப்படும் மேல்நிலை, தரைமட்ட தண்ணீர்த் தொட்டிகளில் அபேட் மருந்துக் கரைசல் ஊற்றப்படுகிறது. தண்ணீர் சேமித்து வைக்கப் பயன்படும் கலன்கள், தொட்டிகளை வாரத்திற்கு ஒருமுறை கழுவ வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது.
மேலும் புகைப்போக்கி இயந்திரம் மூலம் புகை மருந்து நகரம் முழுவதும் அடிக்கப்படுகிறது. கழிவுநீர் கால்வாய்களில் ஸ்பிரே மூலம் கொசு மருந்து அடிக்கப்படுகிறது.
இப்பணிகளை ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார், துப்புரவு அலுவலர் பாஸ்கர், இளநிலை பூச்சியில் வல்லுநர் எஸ். சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.