தினமணி 29.09.2009
அரியலூர் நகராட்சியில் 40 பன்றிகள் பிடிப்பு
அரியலூர், செப். 28: அரியலூர் நகராட்சியில் அசுத்தம் ஏற்படுத்தி வந்த 40 பன்றிகளை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பிடித்து காட்டில் விடப்பட்டது.
அரியலூர் நகராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம், அரியலூர் செட்டி ஏரியில் உள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, நகராட்சி செயல் அலுவலர் எஸ். சமயச்சந்திரன், தலைமை அலுவலர் என். குமரன் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய பசுமைப் படை மாணவர்கள் மூலம் அரியலூர் செட்டி ஏரியில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.
மேலும், அரியலூர் நகராட்சியில் அசுத்தம் செய்து வரும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என்று, பன்றி உரிமையாளர்களுக்கு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும், பன்றிகள் பிடிக்கப்படாததால் நகராட்சி நிர்வாகத்தின் மூலம், பன்றிகளைப் பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அரியலூர் நகராட்சியில் இருந்த 40 பன்றிகள் சனிக்கிழமை பிடிக்கப்பட்டு, வேப்பந்தட்டை அருகேயுள்ள காடுகளில் விடப்பட்டன.
மழைக் காலத்தில் அரியலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில், நகராட்சியில் உள்ள வடிகால்கள் மற்றும் சாக்கடைகள் தூர்வாரப்பட்டு வெள்ளச்சேதம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிர்வாக அதிகாரி எஸ். சமயச்சந்திரன், தலைமை அலுவலர் என். குமரன் ஆகியோர் தெரிவித்தனர்.