தினகரன் 02.09.2013
மாநகராட்சி பகுதியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள நாய்களுக்கு வெறிநாய் நோய் தடுப்பூசி (ரேபிஸ்) போடப்படவுள்ளது. இதற்கான பணிகள் நாளை தொடங்குகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு இதனை பராமரிக்க லக்காபுரத்தில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் மாநகராட்சி பகுதிகளில் பெருகி வரும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் வாகன ஓட்டிகளையும் துரத்தி கடித்து வருகிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையாக கால்நடை மருத்துவமனைக்கு சென்று அதற்குரிய தடுப்பூசிகளை போட்டு வருகிறார்கள்.
ஆனால் தெருவில் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் 1ம்தேதி (நாளை) தொடங்குகிறது. இந்திய விலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உலகளாவிய கால்நடை சேவை இந்தியா அமைப்பின் சார்பில் நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
கடந்த ஆண்டு ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் 5 ஆயிரம் நாய்களுக்கு ரேப்பீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் 5 ஆயிரம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்களும் தங்களது நாய்களை கொண்டு வந்து ரேபிஸ் தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம். நாளை தொடங்கவுள்ள இந்த பணிகள் 13ம்தேதி வரை ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நடைபெறவுள்ளது.