தினமணி 30.09.2009
ரூ.1 கோடி செலவில் கோயில் குளங்கள் தூர்வாரும் பணி: மேயர் சுப்பிரமணியம்
சென்னை, செப். 29: சென்னையில் உள்ள கோயில் குளங்கள் சீரமைக்கும் பணி, மழைநீர் வடிகால்வாய் அமைத்தல், தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன என மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளத்தில் 150-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீர் ஆதாரங்களைப் பெருக்கும் வகையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், மாம்பலம் கோதண்டராமன் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 36 கோயில் குளங்களில் நீர் வழிப் பாதைகள் சீரமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல், மழைநீர் வடிகால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ரூ.2 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது மேலும் சில கோயில் குளங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைத்தல், தூர்வாருதல் உள்ளிட்ட சீரமைக்கும் பணிகள் ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.