தினமலர் 04.09.2013
இலவச கொசு வலைகள் முதல்கட்டமாக கூவம் குடிசைவாசிகளுக்கு கிடைக்கும்
சென்னை:கொசுக் கடியில் இருந்து, பொதுமக்களை காக்க, மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட இலவச கொசு வலைகள் வழங்கும் திட்டத்தை, இம்மாத இறுதிக்குள் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, கூவம் பகுதியில் வசிப்போருக்கு வழங்கப்பட உள்ளன.
ஐந்து லட்சம்
சென்னையில் கொசுக் கடியில் இருந்து பொதுமக்களை காக்க, நொச்சி செடி வளர்ப்பு மற்றும் இலவச கொசு வலைகள் என, இரண்டு முக்கிய திட்டங்களை, கடந்த பட்ஜெட்டில், மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.
இதில், நொச்சி செடிகளுக்கு, மாநகராட்சி முதல்முறை ஒப்பந்தம் கோரிய போது, தனியார் நிறுவனங்கள் அதிக தொகை கோரின. இதனால், இரண்டாவது முறையாக ஒப்பந்தம் கோரப்பட்டது.
இதன்படி, தற்போது, ஐந்து லட்சம் நொச்சி செடிகள் கொள்முதல் செய்ய மாநகராட்சி ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. இம்மாத இறுதிக்குள், நொச்சி செடிகள் குடிசை பகுதிகளில் நடவு செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அடுத்ததாக இலவச கொசுவலைகள் வழங்கும் திட்டத்தில், இந்த கொசுவலைகள் வழங்குவதற்கான தகுதியான பயனாளிகள், மண்டல வாரியாக தேர்வு செய்யும் பணி துவங்கப்பட்டது.
முதல் கட்டமாக, 78 ஆயிரத்து, 184 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 1.17 கோடி ரூபாய் மதிப்பில் கொசு வலைகள் வாங்க மாநகராட்சி ஒப்பந்தம் கோரியது. தற்போது இந்த கொசுவலைகள் வாங்க தனியார் நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு இருப்பதால், இம்மாத இறுதிக்குள் கொசுவலைகளை வினியோகம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக கூவம் கரையோர பகுதி குடிசைகளுக்கு கொசு வலைகள் வழங்கப்பட உள்ளன. தொடர்ச்சியாக பல்வேறு கட்டமாக ஒப்பந்தம் கோரப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள், ஐந்து லட்சம் பயனாளிகளுக்கு கொசு வலைகள் வழங்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
கட்டுப்படுத்த முடியும்
இது குறித்து, சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொசு தொல்லைக்கு தீர்வாக இம்மாத இறுதிக்குள் கொசு வலைகள் வழங்கப்படும். நொச்சி செடிகள் நடவு செய்யும் பணிகளும் இம்மாத இறுதிக்குள் துவங்கப்படும். அதுமட்டுமல்லாமல் கூடுதல் பணியாளர்கள், கூடுதல் இயந்திரங்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
கொசு மருந்து கைதெளிப் பான் 174, புகை பரப்பும் இயந்திரம் 174 என, புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. வாடகை வாகனங்கள் பயன்படுத்த ஒப்பந்தம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொசு தொல்லையை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
முதல்கட்டமாக கூவம் கரையோர பகுதி
குடிசைகளுக்கு கொசு வலைகள் வழங்கப்பட உள்ளன. தொடர்ச்சியாக பல்வேறு கட்டமாக ஒப்பந்தம் கோரப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள், ஐந்து லட்சம் பயனாளிகளுக்கு கொசுவலைகள் வழங்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.