Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி தீவிரம் : கொசு உற்பத்தி ஆதாரம் வீடு,வீடாக அழிப்பு

Print PDF

தினமலர்                04.09.2013

டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி தீவிரம் : கொசு உற்பத்தி ஆதாரம் வீடு,வீடாக அழிப்பு

திருச்சி: டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் வீடுவீடாக சென்று கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை அழிக்கும் பணியை திருச்சி மாநகராட்சி துவக்கியுள்ளது. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் நோய் தாக்குதல் காரணமாக திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல உயிரிழப்புகள் ஏற்பட்டது.

காய்ச்சல் தீவிரமடைந்ததன் காரணமாக திருச்சி மாநகரில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் டெங்கு காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிந்தது. தேங்கி கிடக்கும் நல்ல சுத்தமான தண்ணீரில் இருந்து தான் டெங்கு நோயை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கடந்த வாரத்தில் தினமும் மாலை நேரங்களில் மழை பெய்ததால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டது. அதனால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

திருச்சி மாநகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணியை மாநகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. முதல்கட்டமாக, டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

வீடுகளில் உள்ள சுத்தமான தண்ணீர் பேரல்கள், கொட்டாங்குச்சி, பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகளில் தேங்கும் தண்ணீர் மூலம் டெங்கு நோயை உற்பத்தி செய்யும் கொசுக்கள் உற்பத்தியாகிறது. அதனால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. நல்ல தண்ணீரை திறந்த நிலையில் சேமித்து வைக்க வேண்டாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் போட்டு நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். இவற்றை கடைபிடிக்காத இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் நல்ல தண்ணீர் கீழே கொட்டப்படுவதோடு, பாத்திரங்களும் பறிமுதல் செய்யப்படும்.

இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சியின் நான்கு கோட்ட பகுதிகளில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் மாநகராட்சி பணியாளர்கள், நர்சிங் பயிற்சி மாணவிகள், கல்லூரி மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த விழிப்புணர்வு பணியை அரியமங்கலம் கோட்டம் 24வது வார்டு பிள்ளைமார் தெருவில் நேற்று, தமிழக அரசின் தலைமை கொறடா மனோகரன் துவக்கி வைத்தார். மாநகராட்சி மேயர் ஜெயா, கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக் மீரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம் ஆகிய நான்கு கோட்டங்களில் தலா ஐந்து குழுக்கள் வீதம், தினமும் ஒவ்வொரு குழுவும் 3 ஆயிரம் வீடுகளுக்கு செல்வார்கள்.

இந்த வகையில் நான்கு கோட்டங்களில் தினமும் 60 ஆயிரம் வீடுகளிலும், மூன்று தினங்களுக்கு ஒரு லட்சத்து, 80 ஆயிரம் வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். "டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு மாநகர மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.