Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் "டெங்கு' கொசு "பேக்டரி'களுக்கு சீல் விகாசா பள்ளி அருகே மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர்          23.09.2013

மதுரையில் "டெங்கு' கொசு "பேக்டரி'களுக்கு சீல் விகாசா பள்ளி அருகே மாநகராட்சி நடவடிக்கை

மதுரை : மதுரையில், காய்ச்சலில் பலியான மாணவி படித்த, விகாசா பள்ளியின் அருகே கட்டப்பட்ட ஆறு கட்டடங்கள் மூலம், "டெங்கு' பரப்பும் "ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாவதாகக் கூறி, மாநகராட்சி அதிகாரிகள் கட்டடங்களுக்கு "சீல்' வைத்தனர்.

இப்பள்ளியின் மோசமான சுகாதார சூழலே, மாணவி பலிக்கு காரணம் என, சக மாணவர்களின் பெற்றோர் பிரச்னை எழுப்பினர். "பள்ளியில் உள்ள குறைபாடுகளை, செப்., 23க்குள் சரிசெய்யாவிட்டால், சுகாதாரச் சான்று ரத்துசெய்யப்படும்' என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மாநகராட்சியின் கண்காணிப்பு வளையத்தில், விகாசா பள்ளியும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் கொண்டுவரப்பட்டு உள்ளன. பள்ளி அருகே புதிய குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. நேற்று அங்கு வந்த, கமிஷனர் நந்தகோபால் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், கட்டடங்களில் சோதனை மேற்கொண்டனர். வரைபட அனுமதிக்கு மாறாகவும், கூடுதலாகவும், விதிமீறியும் நடந்த கட்டுமானப்பணியில், பாதாள அறைகள் கட்டப்பட்டதை கண்டறிந்தனர்.

அவற்றில் தேங்கும் நீரில், "டெங்கு' பரப்பும் "ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியானதும் தெரிந்தது. விகாசா பள்ளி குழந்தைகளுக்கு, அவற்றால் பாதிப்பு ஏற்படும் என, உறுதியானது. தனிக்கொடி, பாண்டிசெல்வம், பிரகாஷ், கண்ணன், ராமச்சந்திரன், லட்சுமணன் ஆகியோருக்கு சொந்தமான, ஆறு கட்டடங்களை, அதிகாரிகள் "சீல்' வைத்தனர். அவை தவிர, மேலும் 10 கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கமிஷனர் நந்தகோபால் கூறும்போது, ""இக்கட்டடங்களில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இது அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேல்தளம் எழுப்பிய பின், ரகசியமாக பாதாள அறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆறு கட்டடங்களுக்கு, முதற்கட்டமாக "சீல்' வைத்துள்ளோம்,'' என்றார்.

உதவி கமிஷனர் ரகோபெயாம், உதவி நகரமைப்பு அலுவலர்கள் முத்துக்குமார், நாராயணன், உதவிப்பொறியாளர் மஞ்சுளா உடன் சென்றனர்.