தினமலர் 23.09.2013
பகுதிநேர துப்புரவு பணிக்கு மாநகராட்சி அழைப்பு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 ஊதியம்
சென்னை:ஒரு மணிநேர துப்புரவு பணிக்கு 40 ரூபாய் சம்பளம் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த பகுதி நேர துப்புரவு பணிக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி, துப்புரவு பணியில் சில மாற்றங்களை செய்து, புதிய நடைமுறைகளை கையாள உள்ளது.
அதன்படி துப்புரவு பணிக்கு விருப்பம் உள்ளவர்களை பகுதி நேர அடிப்படையில் பயன்படுத்தி கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்தோர், பதிவு செய்யாதோர், அண்டை வீட்டு குழுக்கள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளின் மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்த துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பகுதி நேர பணி, ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை இருக்கும். ஒரு மணி நேரத்திற்கு 40 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். பணி செய்த நேரம் கணக்கிடப்பட்டு மாதமாக சம்பளம் வழங்கப்படும்.
பணிக்கு 18 வயது முதல் 40 வயது வரை ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு முன்னுரிமை. விருப்பம் உள்ளோர் தங்களது புகைப்படத்துடன் பெயர், முகவரி அடங்கிய விவரங்களை, திட்ட அலுவலர், சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட அலுவலகம், எண், 2, டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600005 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.