Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று ‘நிலவேம்பு குடிநீர் பொடி’ வினியோகம்

Print PDF

மாலை மலர்        13.11.2013

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று ‘நிலவேம்பு குடிநீர் பொடி’ வினியோகம்

சென்னை, நவ. 13- சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு ‘நில வேம்பு குடிநீர் பொடி’ வழங்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு வீடு தேடிச் சென்று ‘நில வேம்பு குடிநீர் பொடி’ வழங்குவதை, சென்னை மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் பழனி தொடங்கி வைத்தார். அப்போது மாநகர நல கூடுதல் அதிகாரி டாக்டர் மணி உடன் இருந்தார்.

சைதாப்பேட்டை தாதண்டம் நகர் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக ‘நில வேம்பு குடிநீர்பொடி’ வழங்கப்பட்டது. அந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமும் நடந்தது. இதில் மண்டல நல அதிகாரி, டாக்டர்கள் குழுவினர், சுகாதார ஆய்வு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

டெங்கு, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் உடல் வலி, மூட்டு வலி ஆகியவற்றுக்கு நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்து. சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் நிலவேம்பு குடிநீர் பொடியில் நிலவேம்பு உள்ளிட்ட 9 மருந்து மூலிகைகள் அடங்கி உள்ளன.

காய்ச்சல் தொடங்கிய முதல் மூன்று நாட்களுக்கு தினமும் 4 வேளை 50 மில்லி லிட்டர் நிலவேம்பு குடிநீரை பருக வேண்டும். காய்ச்சல் குறைந்த பிறகு 50 மி.லி வீதம் 4 நாட்களுக்கு பருக வேண்டும். எந்த காய்ச்சலாக இருந்தாலும் நிலவேம்பு குடிநீரை பருகும் போது ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்தலாம்.

நிலவேம்பு குடிநீருடன் பப்பாளி இலைச்சாறும் தினமும் 10 முதல் 15 மில்லி லிட்டர் நான்கு வேளை பருகலாம். இதனால் ரத்தத்தில் தட்டணு எண்ணிக்கை குறைவதை தடுக்கலாம்.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இவற்றை கொடுக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனை பெறாமல் கொடுக்கக்கூடாது.

நிலவேம்பு குடிநீர் பொடியை 5 கிராம் (ஒரு டீஸ்பூன்) அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி காய்ச்ச வேண்டும். இந்த கலவை கொதித்து 50 மி.லி ஆக வற்றிய பிறகு வடிகட்டி மிதமான சூட்டில் நிலவேம்பு குடிநீரை பருக வேண்டும்.

பப்பாளி இலை சாறு தயாரிக்கும் முன்பு பப்பாளி இலையை பறித்து அதில் உள்ள நரம்புகளை நீக்க வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரில் இலையை கழுவி நீர்விடாமல் அரைக்க வேண்டும். அதை சுத்தமான துணியில் வைத்து பிழிந்து 10 அல்லது 15 மி.லி. சாறு எடுத்து பருக வேண்டும்.

இந்த செய்முறை விளக்கத்தை பொதுமக்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் விளக்கி கூறி வருகிறார்கள்.