தினகரன் 20.11.2013
385 இடங்களில் நம்ம டாய்லெட்
தாம்பரம், : தமிழகத்தில் 385 இடங்களில் நம்ம டாய்லெட் அமைக்கப்பட உள்ளது என நகராட்சி நிர்வாக ஆணையர் தெரிவித்தார்.
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கழிப்பறைகளில் தீவிர துப்புரவு பணி முகாம் நடந்தது. பல்லாவரம் நகராட்சியில் துப்புரவு பணியை நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே தொடங்கி வைத்தார். பின்னர் குரோம்பேட்டை பஸ் நிலையம், சி.எல்.சி. லைன், கோதண்டன் நகர் பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை ஆய்வு செய்தார்.
பின்னர், நிருபர்களி டம் அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா தளங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இலவசமாக பயன்படுத்தும் நம்ம டாய்லெட் 385 இடங்களில் அமைக்கப்படவுள்ளன. இந்த பணி 4 மாதத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். மண்டல நகராட்சி ஆணையர் லட்சுமி, நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தாம்பரம்- வேளச்சேரி சாலையில் நகராட்சி நிர்வாக உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தலைமையில் கழிப்பறை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. இதில் நகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.