தினகரன் 21.11.2013
சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு கொசுவலை திட்டத்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
சென்னை, : சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு கொசுவலை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்வழித்தடங்களின் கரைகளையொட்டி வாழும் ஏழை மக்கள் கொசு தொல்லையால் அவதிபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு இலவச கொசுவலை வழங்கும் திட்டத்தை கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.
இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 78,184 கொசு வலைகள் ரூ.1 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 96 செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதை தொடர்ந்து, சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதலை தடுப்பதற்காக பள்ளி குழந்தைகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் வகையில் வைட்டமின் ஏ சத்து கொண்ட 6.5 லட்சம் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கும் திட்டம், கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக 5.5லட்சம் மூலிகை குணம் கொண்ட நொச்சிச் செடி கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பினை பெறும் வகையில் சென்னை மாகநராட்சியால் முதல்கட்டமாக 710 ஏழை பட்டதாரி இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் பயிற்சி மையங்களையும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.