தினகரன் 05.12.2013
40 மைக்ரானுக்கு குறைவானதா? பிளாஸ்டிக் அளவு கண்காணிக்க நவீன கருவி
சிட்லபாக்கம், : பாலித்தீன் பயன்பாட்டிற்கு தடை விதித்தாலும், பல இடங்களில் 40 மைக்ரானுக்கு மேல் உள்ளதாக கூறி குறைவான மைக்ரான் பிளாஸ்டிக்களை வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். இந்த பயன்பாட்டை கண்காணித்து பறிமுதல் செய்ய பேரூராட்சிகள் தோறும் பிளாஸ்டிக் அளவை அளக்கும் நவீன மைக்ரோ மீட்டர் கருவி வாங்கப்பட்டு வருகிறது.
பேரூராட்சிகளில் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக்களை தடையின்றி பயன்படுத்துகின்றனர். பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வுக்கு செல்லும்போது, 40 மைக்ரானுக்கு மேல் உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதை அலுவலர்களால் பரிசோதிக்க முடியாமல், திரும்பி செல்கின்றனர்.
மைக்ரான் அளவை அளக்கும் நவீன மைக்ரோ மீட்டர் கருவி பயன்படுத்த அரசு அறிவுறுத்தியது. இதன்படி டிஜிட்டல் மீட்டர்களை பேரூராட்சி நிர்வாகங்கள் வாங்கி வருகின்றன.
இதுகுறித்து, சிட்லபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரமோகன் கூறுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க நடத்தப்படும் ஆய்வின் போது, பிளாஸ்டிக் அளவை கண்காணிக்க கருவி வாங்கப்பட்டுள்ளது. 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பயன்படுத்தினால், உடனடியாக பறிமுதல் செய்து, கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்தினால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.